/* */

உணவே மருந்தாகும் அதிசயம் அறிவோம்!

நாம் உணவாக எடுத்துக்கொள்ளும் சில பொருட்களே, நமது நோய் தீர்க்கும் மருந்தாக மாறுகிறது. எந்தவிதமான பக்கவிளைவையும் ஏற்படுத்தாது என்பதே இதன் தனிச்சிறப்பு ஆகும்.

HIGHLIGHTS

உணவே மருந்தாகும் அதிசயம் அறிவோம்!
X

கலர், கலராய் காட்சியளிக்கும் இவை சாக்லேட் மிட்டாய்கள் அல்ல; மாத்திரைகள். ஆண்டுக்கணக்கில் சாப்பிடும் இந்த மாத்திரைகளால், பின்னாளில், உங்கள் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்படும். 

நமது உடல் நலத்தை பொருத்தவரை, வலிமையாக, பலசாலியாக நம்மை உணர்ந்தாலும் சின்ன சின்ன உடல் உபாதைகள் கூட நம்மை, வெகுவிரைவில் பலவீனமாக்கி விடுகிறது. தலைவலி, ஜலதோஷம் கூட உடலின் சோர்வை அதிகரித்து, நம்மை படுக்கையில் கிடத்தி விடுகிறது. இதனால், நமது அன்றாட பணிகள் முடங்கி போய், மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. ஓட்டல்கள், கோவில்கள், சினிமா தியேட்டர்கள், பஸ் ஸ்டாண்டுகளை போல, மருத்துவமனைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சாதாரண காய்ச்ல், தலைவலி போன்ற பாதிப்புகளுக்கு கூட கொரோனோ, மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா என பலவிதமான மருத்துவ பரிசோதனைகளை செய்து, இறுதியில் அந்த நோய் பாதிப்பு இல்லை என முடிவு செய்து, அதற்கான மருத்துவ சோதனை களுக்காக,பல ஆயிரங்களை பறித்து கொள்கின்றனர். இல்லாத நோய்க்கு மருத்துவ பரிசோதனை செய்யும் புது முறையை மருத்துவத்துறை கையாளுவதால், மிக அதிகமாக பாதிக்கப்படுவது ஏழை, நடுத்தர மக்கள்தான்.

இதற்கு தீர்வாக, எளிதான முறையில், நமது நோய்களை நாமே குணப்படுத்தி கொள்ள முடியும். இதை, முன்பு கைவைத்தியம் என்றோ, பாட்டி வைத்தியம் என்றோ கூறுவது உண்டு. இதன் பலன்கள் ஏராளம், பக்கவிளைவுகள் என்பது கிடையாது. உணவே மருந்து என்பதுதான் இதன் தாரக மந்திரம்.

வேனல் கட்டி:

வேனல் கட்டியாக இருந்தால், வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால், சூடு பறக்க ஒரு கலவையாக வரும். அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

வியர்வைக்குரு:

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால், வியர்வைக்குருவை விரட்டி அடிக்கலாம்.

உடல் தளர்ச்சி:

முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து, சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

நீர்ச்சுருக்கு அல்லது நீர்க்கடுப்பு:

வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்தும் குடிக்கலாம்.

தாய்ப்பால் சுரக்க:

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி, குடித்து வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

குழந்தை வெளுப்பாகப் பிறக்க:

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

எரிச்சல் கொப்பளம்:

நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால், எரிச்சல் குறையும். கொப்பளமும் ஏற்படாது.

பித்த நோய்கள்:

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர, கர்ப்பிணிப்பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

கபக்கட்டு:

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர, இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.


நெற்றிப்புண்:

நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில், வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

மூக்கடைப்பு:

இரவில் மூக்கடைப்புக்கு, மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

ஞாபக சக்தி:

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

மாரடைப்பு:

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்:

வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

கை சுளுக்கு:

கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

நீரிழிவு:

அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்:

உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில், அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால், மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

கக்குவான், இருமல், மலச்சிக்கல் உடல் பருமன்:

புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால், தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

உடல் வலுவலுப்பு:

ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும், தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

கீரை சாப்பாடு கூடாது:

குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும், கீரை சாப்பாடு கொடுக்கக் கூடாது.

வாந்தி நிற்கும்:

கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால், கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

உடல் உஷ்ணம்:

எலுமிச்சை பழச்சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால், உஷ்ணம் குறையும்.

நுரையீரல் பாதுகாப்பு:

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக, வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உடல் பருமனாக:

எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

வலி குறைய:

கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால், வலி குறைந்து விடும்.

Updated On: 29 Sep 2022 9:11 AM GMT

Related News