/* */

'ஸ்கிசோஃப்ரினியா' என்பது என்னங்க..? 'பைத்தியம்' என்று கேலி பேசாதீர்கள்..!

Schizophrenia Meaning in Tamil-ஸ்கிசோஃப்ரினியா என்பது மனச் சிதைவு நோயாகும். மனச் சிதைவு என்னென்ன பண்ணும்? அதை குணப்படுத்த முடியுமா? பார்க்கலாம் வாங்க.

HIGHLIGHTS

Schizophrenia Meaning in Tamil
X

Schizophrenia Meaning in Tamil

Schizophrenia Meaning in Tamil

மனச்சிதைவு நோய் என்பது மிகப் பழங்காலத்தில் இருந்தே தொன்றுதொட்டு இருந்து வரும் ஒரு மனநோயாகும். மனச்சிதைவு என்பது தெருவில் சுற்றித்திரியும் பைத்தியங்கள் என்று கிண்டலடிக்கப்பட்ட காலமும் உண்டு. அவர்கள் மீது அவர்களின் நிலை அறியாமல் கல்லெறிந்தவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அந்த காலகட்டத்தில் மனச் சிதைவால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்த வழி தெரியாமல் அவர்களை இரும்புச் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்தார்கள்.

மனச்சிதைவு நோய் என்பது ஒரு கடுமையான மனநோயாகவே கருதப்படுகிறது. காரணம், மனச்சிதைவுக்கு உட்பட்டோர் ஒரு முக சிந்தனை இல்லாமல் பிறழ்வு அடைந்தவர்கள். அதனால் அவர்கள் நோக்கப்படியே செயல்படுவார்கள். ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்பது பெரும் பிரயத்தனம் எடுக்கவேண்டும்.

அவர்களின் சிந்தனை முறையில் மற்றும் உணர்வு முறையில் ஏற்படும் மாற்றங்கள் தான், சமூகம் ஏற்றுக் கொள்ள முடியாத நடத்தையாக அடையாளம் காணப்படுகிறது. அவர்களின் மனச் சிதைவால் சமூக மக்களோடு அல்லது இந்த சமூகத்தோடு இணைந்து வாழும் முறைமையில் இருந்து மாறுபடுகின்றனர்.

மனச்சிதைவு நோய்க்கு ஆளானவர்கள் அவர்களது நுண்ணறிவுத் திறனை இழந்து விடுவதால் அவர்கள் தன்னை உணரும் திறனை இழக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினைக்கூட அறியமுடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர். அவர்களது நுண்ணறிவுத் திறன் இழப்பால் பாதிக்கப்பட்டோரை கவனித்துக் கொள்வதில் குடும்பத்தினர் பெரும் சவாலை எதிர்கொள்ளவேண்டி இருக்கும்.

உண்மையிலேயே இது சாபத்துக்குரிய ஒரு நோய். இளம் வயதில் ஒரு இலக்கை நோக்கி பயணித்து அவர்களின் திறனை வளர்த்துக்கொள்ளும் அந்த தருணங்களில் இதைப்போன்ற மனச் சிதைவு அவர்களின் எதிர்காலத்தையே பாழாக்கிவிடும். இது அவர்களின் பெற்றோரின் நம்பிக்கையையும் சீர்குலைத்து அவர்களின் மொத்த குடும்பத்தையே புரட்டிப் போட்டு விடுகிறது.

மனச்சிதைவுக்கு ஆளானோர் நாம் எதிர்பார்க்கும் வகையில் நடந்துக் கொள்ள மாட்டார்கள் என்பதைவிட நடந்துகொள்ள முடியாது. அதனால்தான் அவர்களை எப்படிச் சமாளிப்பது என்பது அவர்களது குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் தெரிவதில்லை.

மனச்சிதைவுக்கு உட்பட்டோரின் மூளையில் இரசாயன மாற்றங்கள் நடைபெறுகின்றன. சில சமயங்களில் இது பாரம்பர்ய குறைபாட்டால் ஏற்படுவதாகவும் இருக்கலாம். மேலும் மனச் சிதைவு அடைந்தவர்களை இந்த சமூகம் சீண்டி அவர்களை கொடூரக்காரர்களாக சித்தரித்து விடுகின்றனர். அவர்களுக்குள் உள்ள குறைபாட்டை அறிந்தவர்கள் இதைப்போன்று நடந்துகொள்ளமாட்டார்கள். ஒரு மனிதனின் முழு ஆளுமையையும் சிதைக்கும் மிகக் கடுமையான மனநோய் தான் மனச் சிதைவு.

மனச்சிதைவுக்கு உட்பட்டோர் இரவில் நீண்ட நேரம் கண்விழித்து இருப்பார்கள். படித்தவராக இருந்தால் எதையாவது படித்துக்கொண்டு இருப்பார்கள் அல்லது ஏதாவது தேவை இல்லாத வேலைகளில் ஈடுபடுவார்கள்.

இவர்களிடம் காணப்படும் மற்றொரு முக்கிய குறைபாடுகளில் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திக் கொள்வது.

மனச்சிதைவு நோயிலிருந்து மீண்டவர்களுக்கு ஏற்கனவே மனச் சிதைவு ஏற்பட காரணங்களாக இருந்த சூழல் மீண்டும் ஏற்படுமேயானால் மனச்சிதைவு நோய்மீண்டும் அவர்களை பாதிக்கக்கூடும்.

நோய்க்கான அறிகுறிகள் :

  • தர்க்கரீதியற்ற சிந்தனைகள்.
  • விநோதமான உணர்வுகள்.
  • பிறழ்வு நம்பிக்கைகள்.
  • மாயக்குரல்கள் கேட்பது போன்ற உணர்வு மற்றும் அவர்களின் கண்களுக்கு மட்டும் தெரியும் மாயக்காட்சிகள்.
  • இயல்பான இயக்கங்களில் ஏற்படும் தடைகள்.
  • தர்க்க ரீதியற்ற சிந்தனைகள்

இவர்களின் வழக்கமான சிந்தனை முறையில் குழப்பங்கள் ஏற்படும்.அவைகள் உண்மைக்குப் புறம்பான சிந்தனைகளாக மாறுகின்றன. மேலும் சிந்தனையில் ஒழுங்கற்ற முறையே காணப்படும். தொடர்ச்சியான சிந்தனை இருப்பதில்லை. முதலில் ஒன்றைப் பேசும் அவர்கள் உடனே வேறு ஒன்றுக்கு தாவும் மனநிலைக்கு உள்ளாவார்கள்.

அதனால் அவர்கள் என்ன சொல்கின்றர்கள் என்பதே யாருக்கும் புரிவதில்லை. சில சமயம் இவர்கள் சொன்ன ஒரு கருத்தையே திரும்பத் திரும்பச் சொல்லும் நிலையும் ஏற்படும். பிறருடைய கேள்விகளை இவர்கள் புரிந்துக் கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால் கேட்ட கேள்விக்கு முறையான பதில் கூறமுடியாமல் ஒழுங்கற்ற பதிலை கூறுவார்கள்.

ஒரே நேரத்தில் பல சிந்தனைகள் அவர்களுக்குள் வரும். அதை ஒருமுகப்படுத்தும் தன்மையும் இல்லாதததால் ஒழுங்கற்ற பதிலே அவர்களிடம் இருந்து வரும். சில நேரங்களில் பதிலே சொல்லத்தெரியாமல் விழிப்பதும் உண்டு.

மேலும் மனச்சிதைவுக்கு உட்பட்டோர், அவர்கள் மனதையும், சிந்தனைகளையும் யாரோ கட்டுப்படுத்துவதாக உணருவார்கள். மேலும் சிலர் அவர்களது சிந்தனைகளையும், மனதையும் நோட்டம்விட்டு பின்தொடர்வதாக நம்புவார்கள். இதற்கு மேலும் ஒரு படி மேலே போய், அவர்களை உளவுத் துறையினர் வேவு பார்த்து தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புவதாகவும் அதனால்தான் நான் தலைமறைவாக இருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் என்னை பிடித்துவிடுவார்கள் என்று தொடர்பற்ற சில விஷயங்களை கூறுவார்கள்.

விநோத உணர்வுகள்

மனச்சிதைவுக்கு உட்பட்டோரின் உணர்வுகளில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படும். இவர்கள் திடீரென சிரிப்பார்கள். உடனே சிறிது நேரத்தில் திடீரென அழுவார்கள். ஒரு ஒழுங்கற்ற உணர்வுகள் அவர்களை பாடாய் படுத்துவதால் வெளிப்படும் விளைவுகளே இந்த சிரிப்பும் அழுகையும். அவர்களுக்கு என்று ஒரு தனி உலகம் இயங்கும். அந்த உலகத்தில்தான் அவர்கள் சஞ்சரித்து இருப்பார்கள். அதனால் அவர்களால் புற உலகில் இயல்பான முறையில் யாருடனும் தொடர்பு கொள்ள முடிவதில்லை.

பிறழ்வு நம்பிக்கைகள்

அவர்களின் அந்த தவறான நம்பிக்கைகளை பிறர் மாற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. உண்மை நிலை அவர்களுக்கு கூறப்பட்டாலும் அவர்கள் அதை நம்பமாட்டார்கள்.அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் அந்த பிறழ்வு நம்பிக்கை மாற்றமுடியாதது.

எவ்வளவு கற்றவராக இருப்பினும் அவர்களுக்கு உள்ள நோய் பிறழ்வு நம்பிக்கையை பிறரால் மாற்ற முடியாத சூழலை உருவாக்குகிறது. ஏனெனில் அவர்கள் தர்க்கரீதியில் சிந்திக்க முடியாதவர்கள். மனச் சிதைவால் பாதிக்கப்பட்ட சிலர் அவர்கள் கடவுளின் அவதாரம் எனக்கூறி அமானுஷ்ய சக்திகள் இருப்பதாகவும் மிக ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டவர்களாக இருப்பார்கள். அதை நம்ப வைக்கவும் முயல்வார்கள்.

இன்னும் சிலர் அவர்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்படுவாதாக நம்புவார்கள்.ஆனால், அப்படி எதுவும் இருக்காது. ஆனால் அவர்கள் கூறுவதை பிறர் கேட்கும்போது உண்மை என்று நம்பும்படியாக இருக்கும். அந்த அளவுக்கு அவர்களின் கற்பனைத்திறன் ஓங்கி இருக்கும். இதைப்போன்ற மனப் பிறழ்வுகளால் மனச்சிதைவுக்கு உட்பட்டோர் விநோதமான நடவடிக்கைகளை வெளிப்படுத்துகின்றனர்.

மாயக் குரல்கள், மாயக்காட்சிகள்

மனச்சிதைவுக்கு ஆளானோர் புலன் உணர்வுகளில் ஏற்படும் தவறான வெளிப்பாடுகளால் அவர்களுக்கென்று தனியாக தோன்றுபவைதான் இந்த மாயக்குரல்களும் மாய காட்சிகளும். அவை உண்மைத் தன்மையற்ற ஒரு போலியான புலன் உணர்வாகும்.

மனச்சிதைவுக்குட்பட்டோர் காதுகளில் சில மாயக்குரல்கள் கட்டளையிட்டுக் கொண்டேஇருக்கும். இந்தக் குரல்களால் அவர்கள் படும்துன்பங்கள் விபரிக்க முடியாதவை. இவை சில சமயம் அவர்களை மிரட்டும். அவர்களை விமர்சனம் செய்யும். தவறான செயல்களில் ஈடுபட வைக்கும். சில சமயங்களில் இக்குரல்களுக்கு நோயாளர்கள் பதில் அளிக்கவும் செய்வார்கள். இம்மாயக்குரல்கள் இவர்களை சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்ள அல்லது சில சமயங்களில் கொலை செய்யவும் தூண்டும்.

அதேபோல மாயக்காட்சிகளும் அவர்களின் கண்களுக்கு புலப்படும். அவர்களுக்கு அருகில் அல்லது பின்னாலேயே யாரோ இருப்பது போலவும், அவர்களை கொலை செய்ய சிலர் ஓடிவருவது போலவும், இறந்து போனவர்களின் ஆவி தங்களுடன் சேர்ந்து உணவு உண்பது போலவும் இப்படி பல மாயக்காட்சிகள் தோன்றும். சில அசாதாரணமான காட்சிகளையும், சில அருவருப்பான காட்சிகளையும் சில மனச்சிதைவு நோயாளர்கள் பார்த்ததாகக் க்கூறுவார்கள். இன்னும் சிலர் மாய சுவை, மாய வாசனை உணர்வுகளையும் அனுபவிக்கின்றனர்.

இயக்கங்களில் ஏற்படும் தடைகள்

மனச்சிதைவு நோயாளர்கள் சில சமயங்களில் சில நிலைகளில் தொடர்ந்து அசையாமல் அப்படியே பல மணி நேரங்கள் உட்கார்ந்தே இருப்பார்கள். சிலர் நாட்கணக்கில் படுத்தே இருப்பார்கள். இன்னும் சிலர் தொடர்ந்து எதுவும் செய்யாமல் நாள் முழுவதும் ஓய்வில் இருப்பார்கள். மனச்சிதைவு ஏற்பட்ட ஒரு தாய் தன் கைக் குழந்தைக்கு பால் கொடுக்காமல், குழந்தை மீது எவ்வித அக்கறையும் கொள்ளாமல் நாள் முழுவதும் எதையோ வெறித்து வெறித்துப் பார்த்தபடி இருப்பார்.

மனதில் மற்றும் உடலில் புற மற்றும் அக அழுத்தங்கள் தான் ஒருவரின் சிந்தனை முறையிலும், உணர்வு நிலையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. எனவே இப்படிப்பட்ட அழுத்தங்கள் ஒருவருக்கு ஏற்படாமல் தடுத்து விட்டால், மனச்சிதைவு நோய் அவர்களைத் தாக்காது. ஆனால் மனச்சிதைவு நோய் ஒருவரை தாக்கிய பிறகு, அவரிடம் கீழ்க்காணும் மாற்றங்கள் படிப்படியாக ஏற்படும். இம்மாற்றங்கள் ஏற்படுவதை கவனத்தில் கொண்டு, அவருக்கு நெருங்கியவர்கள் உடனடியாக தகுந்த சிகிச்சையை துவங்கிவிட வேண்டும். அப்படிச் செய்தால் அவரை ஆரம்பநிலையிலேயே மனச் சிதைவுக்கு ஆளாகாமல் தடுத்து விடலாம்.

செயல்களில் மந்தநிலை

மனச்சிதைவுக்கு உட்பட்டோரின் செயல்பாடுகள் படிப்படியாக குறைந்து விடும். அவர்களால் மனதை ஒருமுகப்படுத்தி எதையும் செய்யமுடியாது. அதனால் அவர்களின் செயல்பாடுகளில் மந்தநிலை ஏற்படுகிறது. அவர்களின் அறிவுத்திறனில் அல்லது சிந்திக்கும் திறனில் வீழ்ச்சி ஏற்படுகிறது.

தன்னை அறியாத நிலை

மனச்சிதைவுக்கு உட்பட்டோருக்கு அவர்கள் யார் என்பதே தெரியாது. அதை உணரமுடியாது. அவர்களின் உடல் தோற்றம் குறித்த அக்கறை எதுவும் அவர்களிடம் இருக்காது.அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக யதார்த்த உலகில் இருந்து விலகி, தனிமைப்படுத்திக்கொள்ள முற்படுவார்கள். உடல் எடை அதிகரிப்பது, எதிர்பாலினர் மீது ஈடுபாடு குறைவது, முகத்தில் பரு தோன்றுவது, தலைமுடியை வெட்டாமல் இருப்பது, முகச் சவரம் செய்யாமல் இருப்பது போன்ற குறைபாடுகள் தோன்றும்.

மனச்சோர்வு மனநிலை

மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உற்சாகமாக இருக்கமாட்டார்கள். எப்போதும் அதையாவது பறிகொடுத்தது போலவே தோற்றமளிப்பார்கள். எப்போதும் களைத்துப் போனவர்களாக காணப்படுவார்கள். எதிலும் ஆர்வம் இருக்காது. அவர்களுக்கு வாழ்வது என்பது கஷ்டமான விஷயமாகி விடும். பசியின்மை மற்றும் தூக்கமின்மை ஏற்படும்.

நடத்தையில் மாற்றங்கள்

மனச்சிதைவுக்கு ஆளானோருக்கு பிறருடன் உறவாடுவதில் சிக்கல்கள் ஏற்படும். அவர்கள் அமைதியின்றி பரபரப்புடன் இருப்பதுபோலவே இருப்பார்கள்.வேலையே இல்லாவிட்டாலும் தெருவில் எங்காவது சுற்றி அலைவார்கள். களைத்து காணப்படுவர். செயல்களில் சுறுசுறுப்புத்தன்மை குறைந்து விடும். காரணமே இல்லாவிட்டாலும் பிறருடன் சண்டை பிடிப்பார்கள். தினசரி இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும்.

விநோதமான கருத்துகளுக்கு உள்ளாகுதல்

மனச்சிதைவு ஏற்பட்டோர் அவர்களது மனைவியின் கற்பு நிலையில் சந்தேகம் கொள்ளலாம். அவர்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் அவர்களது அதிகாரிகளின் நம்பிக்கையை இழக்கநேரிடலாம். பக்கத்து வீட்டுக்காரர் அவர்களை உளவு பார்ப்பதாகக் கூறுவார்கள். இப்படி பல விநோதமான கருத்துகளை உருவாக்கிக் கொண்டு மனதுக்குள் அவதியுறுவார்கள்.

சிந்தனையில் பாதிப்பு

மனச்சிதைவால் பாதிக்கப்பட்டவர்களின் சிந்தனை முறை பாதிப்புகள் படிப்படியாக நிகழும். அதனால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை மற்றவர்களால் புரிந்து கொள்ளமுடியாது. சிலர் பேசும்போது பேச்சில் தத்துவங்கள் பல புதைந்து இருக்கும். விநோதமான விஷயங்கள் நிறைந்திருக்கும். புதிர்கள் புலப்படும். அவர்கள் தங்களுக்குச் சம்பந்தப்படாத விஷயங்கள் குறித்தும் பேசுவார்கள். சில சமயம் அதிபுத்திசாலிகள் பேசுவது போல அவர்களின் பேச்சு இருக்கும்.

மாற்றமடையும் உணர்வு நிலை

மனச்சிதைவு மிகவும் கொடூரமான மனநோய் என்பதற்கு முக்கியக்காரணம் பாதிக்கப்பட்டோரின் உணர்வுநிலை சட்டென்று மாறுவதே.முகம் எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல் மரக்கட்டை போல் மாறி விடும் நிலையாகும். மேலும் மாற்று உணர்வுகளை வெளிப்படுத்துவது. அதாவது அழவேண்டிய தருணத்தில் சிரிப்பதும், சிரிக்க வேண்டிய சூழலில்; அழுவதுமாகும்.

மாயக்குரல்கள்

மனச் சிதைவுக்கு உள்ளானோர் திடீரென்று அவர்களுக்கு எதிரே யாருமில்லாமலேயே பேசுவதும், சிரிப்பதுமாக இருப்பார்கள். அவர்கள் காதில் கேட்கும் மாயக்குரல்களுக்கு அவர்கள் அளிக்கும் பதில் மற்றவர்களுக்கு விநோதமாகத் தோன்றுகிறது.

சிகிச்சை முறைகள்

மனச்சிதைவு நோயை குணமாக்க தற்காலத்தில் பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. எந்த சிகிச்சை முறை மனச்சிதைவுக்கு உட்பட்டோருக்கு பொருத்தமானதோ அந்த சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுத்து சிகிச்சை அளித்தால் விரைவில் குணப்படுத்தலாம்.

மனவழிச் சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனை :

இந்த சிகிச்சை முறை மூலம் தீவிரமாக பாதிக்கப்பட்ட மனச்சிதைவாளர்களைக் குணப்படுத்த முடியாது. காரணம் அவர்கள் மூளையின் ஆழத்தில் பதிந்துள்ள உண்மைக்கு மாறான கண்ணோட்டங்களும், கருத்தோட்டங்களும் ஆகும். இந்த சிகிச்சை முறையின் மூலம் ஆரம்ப நிலை மனச்சிதைவாளர்களை மட்டுமே குணமாக்க முடியும். சிகிச்சை முறைகள் :

  • குழுவழிச் சிகிச்சை
  • குடும்பவழிச்சிகிச்சை
  • நடத்தை மாற்றுச் சிகிச்சை
  • சிந்தனை முறை மாற்றுச்சிகிச்சை
  • கலைவழிச் சிகிச்சை
  • நாடகவழிச்சிகிச்சை
  • தொழில்வழிச் சிகிச்சை

மேற்கூறப்பட்டுள்ள முறைகள் அனைத்தும் உளவியல் ரீதியிலான சிகிச்சை முறைகளாகும். மருத்துவச் சிகிச்சை முறைகளில், பெரும்பாலோர் நாடுவது அலோபதி சிகிச்சை முறையையே. ஆனால் இச்சிகிச்சை முறையை பாதிக்கப்பட்டோருக்கு ஆயுள் முழுவதும் அளிக்க வேண்டும். அடுத்து இருப்பது, ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை முறையாகும். இம்முறையில் நோயாளர் விரைவில் பூரணமாக குணமடைவார் என்று நம்பப்படுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 12 March 2024 6:13 AM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  2. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  3. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  5. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  6. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  7. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  8. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  9. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’