நோய்களை குணப்படுத்தும் பொருட்கள், உங்கள் வீட்டிலேயே இருக்கு!
நோய் வந்ததும் டாக்டரை தேடி ஓடாமல், வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தியே, நீங்கள் குணம் பெறலாம்.
HIGHLIGHTS
உடலில் எந்த பிரச்னை என்றாலும், உடனே டாக்டரை தேடி ஓடுவது நமது வழக்கமாகி விட்டது. மணிக்கணக்கில் காத்திருந்து, அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட் என ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து, மாதந்தோறும், வாரந்தோறும் மருத்துவமனைக்கு செல்லும் நிரந்தர வாடிக்கையாளராக மாற்றி விடுகிறது, இந்த மருத்துவ உலகம். 90, 100 ஆண்டுகள் வரை வாழ்ந்த நம் முன்னோர்களில் பலர், ஊசி போடாமல், மாத்திரை சாப்பிடாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தவர்கள் என்று சொன்னால், நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை. ஏனெனில், நம் உடல் உபாதைகளுக்கான மருத்துவ குணம் நிறைந்த பொருட்கள், நம்மிடமே இருக்கிறது.
நெஞ்சு சளி:
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து, நன்கு சுடவைத்து ஆற வைத்து, நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
தலைவலி:
ஐந்தாறு துளசி இலைகளும், ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து, நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
தொண்டை கரகரப்பு:
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து, பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட, தொண்டை கரகரப்பு குணமாகும்.
தொடர் விக்கல்:
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் பிரச்னை தீரும்.
அஜீரணம்:
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜீரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜீரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து, அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜீரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது ஒரு தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன், சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
வாயு தொல்லை:
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதால், வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
வயிற்று வலி:
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து, மோரில் கலந்து குடிக்க வயிற்று வலி நீங்கும்.
சரும நோய்:
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து, பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
மூக்கடைப்பு:
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர, மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
கண் எரிச்சல், உடல் சூடு:
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால், முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
வயிற்றுக் கடுப்பு:
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடிக்க வேண்டும். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
பற்கூச்சம்:
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து, தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
வாய்ப் புண்:
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
தலைவலி:
பச்சை கொத்துமல்லித் தழைகளை, மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
வயிற்றுப் பொருமல்:
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி, அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
இடுப்புவலி:
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து, ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
வியர்வை நாற்றம்:
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
உடம்புவலி:
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து, பருகினால் உடம்புவலி தீரும்.
ஆறாத புண்:
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
கண் நோய்கள்:
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு, இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
மலச்சிக்கல்:
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம்.
அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால், பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
கபம்:
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
நினைவாற்றல்:
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
சீதபேதி:
சீதபேதி கடுமையாக இருந்தால், ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
ஏப்பம்:
அடிக்கடி ஏப்பம் வந்தால், வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
பூச்சிக்கடிவலி:
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
இப்படி சுலபமான முறைகளில் நமது உடல் உபாதைகளுக்கு, எளிதில் தீர்வு காணலாம்.