விஜய், அஜீத் மீது வருத்தப்பட்ட வில்லன் நடிகர் பொன்னம்பலம்
சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் நான் மருத்துவமனையில் இருந்த போது நடிகர்கள் விஜய், அஜீத், விக்ரம் என்னை போனில் அழைத்துக்கூட நலம் விசாரிக்கவில்லை என, வில்லன் நடிகர் பொன்னம்பலம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
தமிழ் சினிமாவில், ஒரு கால கட்டத்தில் பிரபலமான வில்லனாக பிரகாசித்தவர் பொன்னம்பலம். ஸ்டண்ட் நடிகராக சினிமா வாழ்க்கையை தொடங்கிய பொன்னம்பலம், பின்னர் ‘நாட்டாமை’ படத்தின் மூலம் முக்கிய வில்லனாக மாறினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் பெரிய ஹீரோக்களுக்கு வில்லனாக இவர் நடித்துள்ளார்.
சிறுநீரக செயலிழப்பு காரணமாக சமீபத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மரணத்தின் விளிம்பில் இருந்து, அவரது உறவினரும் இயக்குனருமான ஜெகநாதன் சிறுநீரகத்தை தானம் செய்ததன் மூலம் அவர் மீண்டும் உயிர் பெற்றார். பொன்னம்பலத்துக்கு கடந்த பிப்ரவரி 10ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது சென்னையில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வரும் அவர், உடல் நலம் தேறி வருகிறார்.
இதற்கிடையில், ஒரு நேர்காணலில் மனம் திறந்து பேசி உள்ளார். வாழ்க்கையில் தான் சந்தித்த சவால்கள் குறித்து, அவர் கூறியதாவது,
அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்தபோது கமல்ஹாசன், சிரஞ்சீவி, சரத்குமார், தனுஷ், அர்ஜுன், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், பிரபுதேவா, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் வந்து உதவி செய்தனர். அஜித், விஜய், விக்ரம் ஆகியோர் என்னை அழைத்து உடல்நிலை குறித்து விசாரிக்கவில்லை. அஜித்தை தனது சொந்த தம்பி போல் நினைத்தேன் அதனால்தான் போன் செய்து நலம் விசாரிப்பார் என்று நினைத்தேன்.ஆனால், விசாரிக்கவில்லை.
(கோப்பு படம்)
குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியதால் எனது சிறுநீரகம் பழுதடைந்ததாக பலர் நினைத்தனர். ஆனால் நான் அப்படி எதுவும் இல்லை. என் தந்தைக்கு நான்கு மனைவிகள். மூன்றாவது மனைவியின் மகன் என் மேலாளராக சில காலம் பணிபுரிந்தார். அப்போது ஒருமுறை பீரில் விஷம் கலந்து கொடுத்தார்.
முதலில் அவர் அதைச் செய்ததாகத் தெரியவில்லை. பின்னாளில் அந்த ஸ்லோ பாய்சன் என் ரத்தத்தோடு கலந்தது. இதனால் தான் என் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இது எனக்கு முதலில் தெரியாது. பின்னர் என்னுடன் பணியாற்றியவர்களிடம் விசாரித்தபோது இந்த விஷயங்கள் அனைத்தும் தெரிய வந்தது. நான் நல்ல நிலையில் இருக்கிறேன். அவனால் நன்றாக வாழ முடியவில்லை. இவையெல்லாம் பொறாமையால் செய்யப்பட்டவை. கடவுளின் அருளால் தான் நலமுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தக்க நேரத்தில் தனக்கு உதவி செய்த நடிகர்களுக்கும், முகம் தெரியாத ஏராளமான ரசிகர்களுக்கும் தன் நன்றியை தெரிவித்துள்ளார்.
வில்லன் நடிகராக இருந்தாலும், பொன்னம்பலம் அனைவராலும் ரசிக்கப்படும் ஒரு நடிகர். ஸ்டண்ட் நடிகராக தனது சினிமா பயணத்தை துவங்கிய அவர், பல படங்களில் வில்லனாக நடித்து, ரசிகர்களின் மத்தியில் பெயர் பெற்றார். சில படங்களில் காமெடி நடிப்பையும் வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித், விஜய் படங்களில் நடித்த தன்னிடம், நலம் கூட விசாரிக்காததால், அவர்கள் மீதான தனது வருத்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் வில்லன் நடிகர் பொன்னம்பலம்.