அன்று சாதாரண மனிதன்; இன்று சரித்திர நாயகன் - ரஜினியின் 'சக்சஸ் பார்மூலா'
இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஒரு சாதாரண மனிதனாக வாழ்க்கையை துவங்கி, இன்று புகழின் உச்சியை தொட்டிருக்கும் ரஜினிகாந்த், வெற்றியின் சூத்திரம் தெரிந்து கொள்வோம்.
HIGHLIGHTS
ரஜினி, இது தமிழகத்தின் மூன்றெழுத்து மந்திரமாக ஒரு கட்டத்தில் மாறிப்போனது. எம்ஜிஆரை போலவே, ரசிகர்களின் மனம் கவர்ந்த சினிமா நட்சத்திரமாய் ரஜினி இன்றும் போற்றப்படுகிறார். இப்போதும், 72 வயதிலும், 'ஹீரோ'வாக, ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறார். வெற்றி சிகரத்தின் உச்சம் தொட்ட ரஜினி, இன்று தனது 72 வது பிறந்த நாளை, கொண்டாடுகிறார்.
ரஜினி, கர்நாடகாவை சேர்ந்தவராக இருந்தாலும், சென்னைக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தார். பஸ் கண்டக்டராக தன் வாழ்க்கையை துவங்கிய அவர், நடிப்பு மீது கொண்ட ஆர்வத்தால், தமிழகத்துக்குள் வந்தார். துவக்கத்தில், கே. பாலசந்தர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' படத்தில், சிறிய பாத்திரம் ஒன்றில் அறிமுகமானார். பின், 'பைரவி' என்ற படத்தில், கதாநாயகனாக மாறினார். அப்போதே, புகழ் பெற்றிருந்த கமல்ஹாசனுடன் சில படங்களில் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிட்டியதால், ரஜினியும் ரசிகர்களால் அதிகமாக கவனிக்கப்பட்டார். தொடர்ந்து, 'தில்லு முல்லு' படத்தில் நடித்தார். நெற்றிக்கண், ராணுவ வீரன், தாய் மீது சத்தியம், ரங்கா, பில்லா போன்ற பல படங்கள் ரஜினிக்கு வெற்றிப்படங்களாக அமைந்தது.
தொடர்ந்து தாய்வீடு, அடுத்த வாரிசு, தங்கமகன், நல்லவனுக்கு நல்லவன் என, பல படங்கள் ரஜினிக்கு மிகப்பெரிய நடிகர் என்ற அந்தஸ்தை தேடித்தந்தது. சகலகலா வல்லவன், காக்கிச்சட்டை, விக்ரம், குணா, மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், நாயகன் என, கமல் ஒருபுறம் தமிழ் சினிமாவை தன் நடிப்பால், வசப்படுத்தி இருக்க, ரஜினி - கமல் என்ற இரு ஆளுமைகளும் அசைக்க முடியாத உயரங்களை தொட்டன.
அண்ணாமலை, பாட்ஷா படங்களுக்கு பிறகு, ரஜினி கோடிகளில் வசூலை குவிக்கத் துவங்கினார். ரஜினி என்ற வெற்றிக்குதிரையின் மீது பந்தயம் கட்ட, படத்தயாரிப்பாளர்கள் படை எடுத்தனர். அதற்கேற்ப இயக்குநர்களை தேர்வு செய்த ரஜினிகாந்த், ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமான கதைகளை தேர்வு செய்தார். அதில், தன்னையும், தனது ஸ்டைலையும் பிரதானமாக கொண்டு வரச்செய்தார். கதையின் முழு முக்கியத்துவத்தையும், தன்னை சுற்றியே இருக்கும்படி வைத்துக்கொண்டார். தன்னை பெருமைப்படுத்தும் விதமான, கேரக்டர்களை உருவாக்க செய்தார்.
அதன்படியே அண்ணாமலை, பாட்ஷா, முத்து, படையப்பா, பாபா, சிவாஜி, ரோபோ, ரோபோ 2, கபாலி, பேட்ட, காலா, தர்பார் போன்ற படங்கள் உருவாக்கப்பட்டிருந்தது. இதில் 'சந்திரமுகி' மட்டுமே, கதாநாயகியை மையப்படுத்திய கதையாக இருந்தது. ஏனெனில், இது மலையாளத்தில் வெளிவந்த 'மணிசித்ரதாழ்' என்ற படத்தை தழுவி எடுக்கப்பட்டது. என்றாலும், 'சந்திரமுகி' படத்திலும், ரஜினியின் கேரக்டருக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.
ரசிகர்களை மையப்படுத்தியே வசூலை குறிவைத்து எடுக்கப்பட்ட படங்கள் 'கமர்ஷியல்' ஆக, வெற்றி பெற்றதால், ரஜினி வசூல் மன்னனாக, தமிழ் திரையுலகினருக்கு பொன் முட்டை இடும் வாத்தாக மாறினார். அதே வேளையில், இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம் மட்டுமே நடித்து, ரசிகர்களை ஏங்க வைத்து, தியேட்டர்களுக்கு வரவழைத்தார்.
'நான், அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் இருக்கிறது' என்று சொல்லி, சொல்லியே, கடந்த 20 ஆண்டுகளாக, தன் ரசிகர்களை, ரசிகர் மன்ற நிர்வாகிகளை, தன் படத்தின் வெற்றிக்காக, சம்பளமின்றி உழைக்க வைத்தார். கடைசியில், 'அரசியலில் குதிக்கிறேன்' எனக்கூறி விட்டு, நிறைய படங்களில் நடிக்க துவங்கினார். படங்கள் 'ஹிட்' ஆன பின்பு, 'தமிழகத்தில், புரட்சி, மலர்ச்சி வந்தால், நான் அரசியலுக்கு வருகிறேன்,' என 'ஜகா' வாங்கினார்.
ரஜினியை பொருத்தவரை, சினிமா என்ற வியாபாரத்தை புரிந்துக்கொண்டு, அதற்கேற்ப தன் படங்களை உருவாக்கிக்கொண்டார். படங்களின் வெற்றிக்காக, தேவையான சூத்திரங்களை திறம்பட கையாண்டார். சினிமா உலகின், 'சக்சஸ் பார்மூலா'வை,தன் வெற்றிக்காக சிறப்பாக அமைத்துக்கொண்ட ரஜினி, என்றென்றும் ' சூப்பர் ஸ்டார்' தான். இன்று அவரது பிறந்த நாளை, ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.