/* */

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே : உணர்த்தியது 'அவன்தான் மனிதன்'

'சினிமா கொட்டகை'

HIGHLIGHTS

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே :  உணர்த்தியது அவன்தான் மனிதன்
X

அவன் தான் மனிதன் பட போஸ்டர் 

மேன்மக்களின் மேன்மையை வெளிப்படுத்திய அவன்தான் மனிதன் திரைப்படம்.

1975 ம் ஆண்டில் வெளிவந்த சிறந்த படம் அவன்தான் மனிதன். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்ற தமிழ் மூதுரையின் கருத்தை அழகாக வெளிப்படுத்திய படம் என்றும் சொல்லலாம். மயிர் நீக்கின் உயிர் வாழா கவரிமான் என மேன்மக்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியவில்லை என்றால் அதற்குப் பின் அவர்களால் உயிர் வாழ முடியாது என்பதே இந்த படத்தின் மையக்கரு. இதில் அந்த பாத்திரத்திற்கு சிவாஜ் உயிரூட்டி, அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார். ஏ.சி.திருலோகசந்தர் இயக்கிய இந்த படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் அனைத்தும் வாழ்க்கையின் தத்துவத்தை பாமரருக்கும் எளிதில் புரியும் விதத்தில் அழகாக எழுதியிருப்பார். இந்த பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அமைத்த இசையும், அதைப் படமாக்கிய விதமும், இதற்கு நடிகர் திலகம் வெளிப்படுத்திய நடிப்பும் என்றும் திகட்டாதவை.


ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா பாடலும் சரி, மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று என்ற பாடலும் சரி படத்தின் வைர வரிகள். மனிதன் நினைப்பதுண்டு பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதமும் அதற்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அமைத்த இசையும் தனியாக கூறப்பட வேண்டியது. ஒரு காட்சியில் கடற்கரையில் சிவாஜி பாடியபடி நடந்து வர எங்கிருந்தோ பறந்து வரும் வெள்ளைப்புறா ஒன்று சிவாஜியின் தோளிலும் முழங்கையிலும் அமர சிவாஜி நடந்து செல்லும் உடல்மொழியின் மூலம் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

கண்ணதாசன் பத்திரிகையின் கேள்வி பதில் பகுதியில் கவியரசரிடம் ஒரு வாசகர், நான்கு விலங்குகளில் தினம் நாட்டியமாடுகிறோம் என்ற வரிக்கு, இரண்டு கைகள், இரண்டு கால்கள் விலங்கிடப்பட்ட நிலையில் மனிதன் நடனமாடுகிறான் என்ற பொருளை அந்த வாசகர் அர்த்தப்படுத்தியிருந்தார். இதுகுறித்து கவியரசரிடம் விளக்கம் கேட்ட போது அவர் மற்றொரு விளக்கமும் அளித்தார்.

அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றை பற்றி திருக்குறள் போதிக்கிறது. இந்த மூன்றிலும் தேர்ந்த மனிதன்தான் வீடுபேறு அடைவதாக ஆன்மீக நூல்கள் கூறுகின்றன. ஆனால் இவை நான்கும் கூட மனிதனை ஆட்டிப் படைக்கும் விலங்குகள்தாம் என்று கண்ணதாசன் தெரிவித்தார்.

அதே போல் 'அன்பு நடமாடும் கலை கூடமே; ஆசை மழை மேகமே..' என்ற பாடலின் அத்தனை அடிகளுமே "மே" என்றுதான் முடியும்...! கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு உயிர்கொடுத்து உலவ விட்டிருப்பார் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

இதற்கு கவியரசர் கண்ணதாசனின் மகனும், கண்ணதாசன் பதிப்பகத்தின் நிறுவனருமான காந்தி கண்ணதாசன், இதற்கு முன்பு இந்த பாடலை மையப்படுத்தி சில கட்டுக்கதைகளையெல்லாம் பலமுறை அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள். அவை எதுவுமே உண்மை கிடையாது. கவியரசர் தன் மனதில் அந்த சமயத்தில் என்ன நினைப்பாரோ, அந்த நேரத்தில் என்ன தோன்றுமோ அதையே பாட்டாக எழுதிவிடுவார். அதுதான் அவரது சிறப்பே. அதுபோல்தான் இந்த பாடலும். அவன்தான் மனிதன் படக்காட்சிக்காக படத்தின் தயாரிப்பாளர் ஏ.ராமாநுஜம் கேட்க, கண்ணதாசனும் பாட்டு எழுதி தர ஒப்புக்கொண்டார். ஆனால், படக்காட்சிகள் சிங்கப்பூரில் படமாக்க இருப்பதால், நடிகர், நடிகைகள் அனைவரும் வருகிற மே மாதம் சிங்கப்பூர் செல்லவிருக்கிறோம் என்று சொல்லவும், அதற்கும் பாடல் வேண்டும் என்று கேட்க, அதனை மையப்படுத்தியே கவியரசர் மே-எழுத்தில் முடியுமாறு எழுதி கொடுத்தார்" என்றார்.

அதேபோல், திரைப்பட தயாரிப்பாளரும், கண்ணதாசனின் அண்ணன் ஸ்ரீநிவாசனின் மருமகளுமாகிய ஜெயந்தி கண்ணப்பன் இந்த பாடல் குறித்து கூறும் போது, ஒற்றை எழுத்து முடியுமாறு பாடல் எழுதுவது மிகவும் கடினம். பாடலின் முடிவில் ஏதோ ஒற்றை எழுத்து வந்தால் போதும் என எழுத முடியாது. அப்படியே எழுதினாலும் அதில் அர்த்தம் பொதிந்திருக்க வேண்டும், இசைக்கு பொருந்தி வரவேண்டும். பாடல் கேட்கும்போது இனிமை தரவேண்டும். இதையெல்லாவற்றையும் சேர்ந்து அளித்திருப்பார் கண்ணதாசன் என்று கூறியிருந்தார்.

'அன்பு நடமாடும் கலைக்கூடமே', 'எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது' ஆகிய பாடல்கள் மறுபடியும் கேட்கத் தூண்டுபவை. இந்த படத்தின் உயிர்நாடி பாடலான 'ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா' பாடலில் வரும் வரிகளான 'நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே' மற்றும் 'இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்' மற்றும் 'கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்' என்ற வரிகளின்போதும் மயங்காத மக்களே இல்லை எனலாம்.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் கேட்க, கேட்க இன்றும் மனதிற்கு சுகம் தருபவை. உற்சாகத்தின் களிப்பில் இருக்கும் போது ஊஞ்சலுக்கு பூச்சூட்டி என்ற பாடல் உற்சாகத்ததை இரட்டிப்பாக்கும். இந்த பாடலில் மஞ்சுளா ஒரு வார்த்தை கூட பேசமாட்டார். வெறும் புன்சிரிப்பு ஒன்றையே அத்தனைக்கும் பதிலாக அளிப்பார். அவரிடம் என்ன மொழியில் பேசுவது என்ற தவிப்பை சிவாஜி அழகாக வெளிப்படுத்தியிருப்பார். ஒரு சாதாரண இளைஞன் மொழி தெரியாமல் தன் காதலை எப்படி வெளிப்படுத்த துடிப்பார்கள் என்பதை இதில் பார்க்கலாம். அதற்குப்பின் அவர் தமிழ் என்று தெரிந்ததும் அடையும் ஆனந்தத்தை வெளிப்படுத்தும் இடத்திலும், அவரை இழக்கும் காட்சியிலும் தனக்கு நேர்ந்தது போல, ஒவ்வொரு ரசிகனையும் நினைக்க வைத்திருப்பார்.

அதற்குப்பின் தன்னுடைய சொந்த ஊரில் மிகப்பெரிய ராஜ வம்சத்தை சேர்ந்தவர் மிகப்பெரிய தொழிலதிபர் என்ற அந்தஸ்துடன் வாழ்பவர் என்பதற்குரிய கண்ணியத்துடன் கூடிய மனிதராக வாழ்ந்து காட்டிய ரவிக்குமார் என்ற மனிதருக்குள்ளும் காதல் என்ற மெல்லிய மலர் பூக்கிறது. ஆனால் இளைஞராக இருந்த போது இருந்த காதலுக்கும், இந்த பெரிய மனிதருக்கும் (வயதில் அல்ல, அந்தஸ்து மற்றும் பொறுப்பு) உண்டான காதலுக்கும் உள்ள வேறுபாடு, மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம். தொழிலதிபர் ரவிக்குமாருக்கும், அவருடைய செகரட்டரியாக வரும் (ஜெயலலிதா) லலிதாவுக்கும் இடையே உருவாகும் காதல் நடுத்தர வயதினரிடையே உருவாகும் காதலை அந்த வயதுக்கேற்ப அழகாக காட்டியிருப்பார்கள். ஆனால், அந்த காதலை இருவரும் வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.


வசனங்களைப் பொறுத்தவரை முதல் காட்சியில் மேயராக பதவியேற்கும்போது ஆரம்பித்து இறுதிக்காட்சி வரை நடிகர் திலகத்தின் ஸ்பெஷல் வசனங்கள் ஒவ்வொன்றும் அவரின் குணத்தை எடுத்துக் காட்டுவதாகவும்,மக்கள் மனதை கொள்ளை கொண்டவையாகவும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மேஜரின் 'எல்லாம் பேசி முடிச்சுடீங்களா எஜமான்' என்பதற்கு நடிகர் திலகம் சொல்லும் ஆஹா, ராசி என்பது மோதிரத்திலியா இருக்கு. இங்கே என்று நெற்றியை வரைந்து காட்டுவது, இந்த கைக்கு மேலே இருந்து கொடுத்துதான் பழக்கம், கீழே கையை நீட்டி பழக்கமில்லை என்பது.

செஸ் விளையாட்டு விளையாட வரும் குட்டி பெண், 'ராஜா பொம்மை உடைந்திருக்கிறது' என்று சொல்ல அதை பார்த்துக்கொண்டே, 'எவ்வளவு உடைஞ்சாலும் ராஜா ராஜாதான்' என்ற நடிகர் திலகத்தின் வசனத்திற்கு தியேட்டரே அதிர்ந்தது.

இதற்கிடையில் ரவிக்குமாரின் தீப்பெட்டி தொழிற்சாலையில் மேனேஜராக சேரும் சந்திரன் (முத்துராமன்) மனைவியை இழந்தவர். தன்னுடைய ஒரே மகளான சுமதியுடன் சிரமப்படுவதை கண்டு அவரை தன்னுடைய கெஸ்ட் ஹவுசில் தங்க வைக்கிறார். சுட்டிப் பெண்ணான சுமதி தொழிலதிபரான ரவிக்குமாரை மிகவும் கவர்கிறாள் அவருக்கு உதவுவதற்காக தன்னுடைய செகரட்டரியிடம் கூற, சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர்கள் இருவரும் ஒன்று சேர்க்கிறார்கள். முற்போக்கு சிந்தனையாளனான சந்திரன் தொழிற்சாலையை நவீனப்படுத்த விரும்புகிறான். ஆனால், அதனால் பல தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளது என்பதால், ரவிக்குமார் மறுக்கிறார். இருவருக்கும் ஏற்படும் கருத்து வேறுபாட்டால், சந்திரன் தன்னுடைய வேலையிலிருந்து விலகி தனியாக ஒரு தொழிற்சாலையை தொடங்குகிறான்.


தொழிலதிபரான ரவி தன்னுடைய கொடை வள்ளல் தன்மையாலும், தொழிற்சாலையின் பிற்போக்கு தன்மையாலும் தன்னுடைய செல்வத்தை இழக்க நேரிடுகிறது. ரவிக்குமாருடைய வீடு விற்பனைக்கு வருகிறது. அப்போது சந்திரன் அந்த வீட்டை வாங்கி, ரவிக்குமாருக்கு கொடுக்க விரும்புகிறான். ஆனால் கொடுத்தே பழக்கப்பட்ட ரவி, அதை வாங்க மறுக்கிறார். ஆனால், அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க கெஸ்ட் ஹவுசில் தங்குகிறார். அவருடன் அவருக்கு விசுவாசமான இருந்த முருகன் (மேஜர் சுந்தர்ராஜன்) மட்டுமே உடனிருக்கிறார்.

அவர் வளர்த்து வரும் வெள்ளைப்புறாவும் உடனிருக்கிறது. அப்போது சந்திரனுடைய குழந்தை சிவாஜியிடம் உள்ள புறா தனக்கு வேண்டும் என்று அழுகிறது. குழந்தையை சமாதனப்படுத்த புறாவை கேட்பதற்காக லலிதா சிவாஜி தங்கியிருக்கும் கெஸ்ட் ஹவுஸ்-க்கு வருகிறார். வந்தவரை உபசரிப்பதற்கு வேறு எதுவும் இல்லாத சூழலில், தன்னுடன் இருக்கும் புறாவை சமைத்து தரும்படி முருகனிடம் கூற முருகனும் அவ்வாறே செய்கிறார். சாப்பிட்டு விட்டு, லலிதா புறாவை கேட்க, அதை தரமுடியாத நிலையில், இல்லை என்று சொல்ல முடியாத சோகத்தில் தன் உயிரை விடுகிறார் ரவிக்குமார். ஆனால் அந்த ரவிக்குமார் என்ற மனிதன் இன்றும் மக்கள் மனதில் பசுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

Updated On: 18 April 2021 11:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  2. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  3. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!
  4. நாமக்கல்
    கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி : நாமக்கல் கோழிப்பண்ணைகளில்...
  5. திருவண்ணாமலை
    வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  7. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  8. நாமக்கல்
    சித்திரை மாத முதல் சனிக்கிழமை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு முத்தங்கி...
  9. நாமக்கல்
    தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும்: கொமதேக...
  10. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?