பிரபல நடிகர் சரத்பாபு காலமானதாக வெளியான செய்திக்கு உறவினர்கள் மறுப்பு
பிரபல நடிகர் சரத்பாபு இன்று உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததாக வெளியான செய்தி தவறானது என அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
HIGHLIGHTS
பிரபல நடிகர் சரத்பாபு இன்று ஹைதராபாத்தில் உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததாக சோஷியல் மீடியாக்களில் உலா வரும் செய்தி தவறானது என அவரது உறவினர்கள் மறுத்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு திரை உலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வந்தவர் சரத்பாபு. 72 வயதான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுநீரக பிரச்சனை மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்களால் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த ஒரு வாரமாகவே அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் பின்னடைவு ஏற்பட்டு வந்தது. இதனால் அவர் கவலைக்கிடமான நிலையில் இருந்து வந்தார். இந்த நிலையில் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் இன்றி இன்று இரவு சரத்பாபு மரணம் அடைந்ததாக வெளியான செய்திக்கு அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
நடிகர் சரத்பாபு தமிழில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் முள்ளும் மலரும் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் ஒரு பொறியாளர் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தில் அவரது நடிப்பில் செந்தாழம் பூவில்... என்ற பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
மேலும் உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக்கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை, கீழ் வானம் சிவக்கும் என்பது உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார், இவர் அதிக படங்களில் கதாநாயகனாக நடிக்கவில்லை என்றாலும் குணச்சித்திர நடிகர், வில்லன் உள்ளிட்ட இடங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார், தமிழுக்கு இணையாக தெலுங்கு படங்களிலும் அதிக அளவில் நடித்திருந்தார், இவர் மறைந்த நடிகர் நாகேஷின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் மற்றும் இயக்குனர் மனோபாலா இன்று மதியம் மரணம் அடைந்தார். இந்நிலையில் இரவில் நடிகர் சரத்பாபுவும் இறந்துள்ளதாக செய்தி வெளியானது. ஆனால் இது தவறான செய்தி என அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அவர் தற்போது ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். .