பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றி: கல்கி அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடி வழங்கிய லைகா நிறுவனம்..
பொன்னியின் செல்வன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அந்தக் கதைக்கு சொந்தக்காரரான கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளைக்கு லைகா நிறுவனம் ரூ. 1 கோடி வழங்கி உள்ளது.
HIGHLIGHTS
அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்று சம்பவங்களை மையமாகக் கொண்ட புனைவுக் கதையான பொன்னியின் செல்வன் நாவல் மிகவும் பிரபலமானதாகும். சோழர்களின் வரலாற்றையும், அவர்களது கடல் கடந்த போர் திறமையையும் வெளிப்படுத்தும் வகையில் பொன்னியின் செல்வன் நாவலில் பதிவுகள் இடம்பெற்றிருந்தது.
5 தொகுதிகளைக் கொண்ட பொன்னியின் செல்வன் நாவலை வாசித்தவர்கள் அனைவரும் கல்கியின் எழுத்துக்கு விசிறிகள் என்றே கூற முடியும். அந்த நாவலை எப்படியாவது திரைப்படமாக உருவாக்க வேண்டும் என மறைந்த எம்ஜிஆர் ஆசைப்பட்டார். மேலும், நடிகர் கமலஹாசன் பல முயற்சிகளை மேற்கொண்டார். இருப்பினும் அந்த பிரமாண்ட படைப்பை அவர்கள் இருவராலும் உருவாக்க முடியவில்லை.
இந்தநிலையில், பல வெற்றிப் படங்களை உருவாக்கிய மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவன தயாரிப்பில் கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் நாவல் மாபெரும் பொருட்செலவில் திரைப்படமாக எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் தயாரிக்கப்படுவதாக லைகா நிறுவனம் அறிவித்தது.
நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், நாசர், பிரபு மற்றும் நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பெரும் பட்டாளங்களுடன் தயாரிக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி 5 மொழிகளில் வெளியாகியது.
தமிழ் மொழி மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் வெளியிடப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில், நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், இயக்குநர் மணிரத்னம், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோர் பல்வேறு தகவல்களை பகிர்ந்துக் கொண்டனர். அப்போது, பொன்னியின் செல்வன் கதையை எழுதிய அமரர் கல்வி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடி வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பொன்னியின் செல்வன் படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குநர் மணிரத்னம் ஆகியோர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று கல்கி அறக்கட்டளை நிர்வாகி சீதாரவி மற்றும் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் மகன் கல்கி ராஜேந்திரன் ஆகியோரிடம் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கியதாக நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. அந்த நிகழ்வின் புகைப்படம் திரையில் வெளியிடப்பட்டது.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் திரைப்படமாக எடுப்பதாக அறிவித்தபோதே கல்கியின் குடும்பத்துக்கு ராயல்டியாக ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என எழுத்தாளர்கள் வலியுறுத்தினர். அதன்பேரில், தற்போது கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கி அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளனர்.