‘மாட்டுக்கார வேலன்’ படத்தை 100 தடவை பார்த்த மூதாட்டி; எம்ஜிஆரிடம் என்ன சொன்னார் தெரியுமா?
மாட்டுக்கார வேலன் படத்தின் 100வது நாள் விழாவில் நடந்த சம்பவம் இது... மக்கள் மீது, எம்ஜிஆர் கொண்டிருந்த அன்பும், மக்கள், அவர் மீது கொண்டிருந்த உயர்ந்த அன்பையும் உணர்த்தும் ஒரு உன்னத நிகழ்வு இது.
HIGHLIGHTS
மக்கள் திலகம் எம்ஜிஆர் மறைந்து, பல ஆண்டுகள் கடந்தாலும், அவரை பற்றி தெரிந்துக்கொள்வதில், அவரது வாழ்வில் நடந்த சுவாரசியமான தகவல்களை அறிந்துகொள்வதில், அவரது ரசிக பெருமக்களுக்கு இப்போது மட்டுமல்ல, எப்போதுமே ஆர்வம் குறையாது. ஏனெனில் அவர் மக்களின் தலைவராக வாழ்ந்து மறைந்தவர். தனக்காக எதையும் செய்யாமல், பிறருக்காக வாழ்ந்தவர். பிறரது நன்மைகளில் அக்கறை காட்டியவர்.
ரஜினி, கமல், விஜய், அஜீத் என எத்தனை புதிய நடிகர்கள் வந்தாலும், எம்ஜிஆர் மக்களிடம் பெற்ற செல்வாக்கை, புகழை அவர்களால் எட்டிப் பிடிக்கவே முடியாது என்பதுதான் மாபெரும் உண்மை. ஏனெனில், சரித்திர நாயகராக அவர் மக்கள் மனங்களில் இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பவர். அதனால், எப்போதும் அவரது புகழ் நிலைத்துக்கொண்டே இருக்கும். அதற்கு உதாரணமாக, நடந்த இந்த சம்பவத்தை சொல்லலாம்.
ஜெயந்தி பிக்ச்சர்சின் உரிமையாளர் கனக சபைச் செட்டியார் தயாரிப்பில் உருவான படம் மாட்டுக்கார வேலன். இந்த படத்தில், இரட்டை வேடங்களில் எம்ஜிஆர் நடித்திருப்பார். ஒருவர் படித்த நகரத்து வாலிபராகவும், மற்றொருவர் மாடுகளை பராமரிப்பவராகவும் இருப்பார். ஜெயலலிதா, லட்சுமி இருவரும் இதில் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இந்த படமும், பாடல்களும் சூப்பர்ஹிட் ஆனது. அந்தப் படத்தின் 100 வது நாள் விழா, சேலத்தில் நடந்தது , மக்கள் திலகமும் இவ்விழாவுக்கு வந்திருந்தார் .
சேலத்தில் விழா நடந்த திரையரங்கத்தின் உரிமையாளர், ஒரு மூதாட்டியை மேடைக்கு அருகே அழைத்து வந்தார். மக்கள் திலகத்திடம் அவர்,
" படம் ஓடிய நூறு நாட்களும் விடாமல், இந்தம்மா டிக்கெட் வாங்கி வந்து படம் பார்த்தார். உங்கள் மீது கொள்ளை பிரியம் கொண்டவராக இருக்கிறார். அவர் உங்களை நேர்ல பாக்கணுமாம் " என்று சொல்ல, மக்கள் திலகம் எம்ஜிஆர் எழுந்து கை கொடுத்து அவரை மேடையில் ஏற்றி தன் அருகில் உட்கார வைத்தார்.
விழாவுக்கு வந்திருந்த மற்றவர்களை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் , அந்த மூதாட்டியிடம் நலம் விசாரிக்கத் துவங்கினார் ,
"கணவரை இழந்து 30 வருஷம் ஆச்சு , பிள்ளைங்க இருந்தும், என்னை கவனிப்பது இல்லை . கீரை வித்து வயித்தை கழுவுகிறேன் .அந்த கீரை கூடையைச் சுமந்தால் ஒரு நாளைக்கு மூணு ரூபாய் வருமானம் கிடைக்கும் அதிலே ஒரு ரூபாய் உங்கள் படம் பார்க்க செலவழிச்சேன் " என்று, அந்த மூதாட்டி கூறி இருக்கிறார்
‘எதுக்கும்மா, 100 தடவை இந்த படத்தை பார்க்கணும் ? என்று எம்ஜிஆர் அவரிடம் ஆர்வமாய் கேட்டிருக்கிறார்.
"உன் பால் முகத்தை எத்தனை தடவை பார்த்தாலும் ஆவல் அடங்காதுப்பா , அதோடு உன்னை பெத்த புண்ணியவதி எப்படி அதிர்ஷ்டமானவள்னு நினைச்சுப் பார்க்கிறேன். என் வேதனை மறக்க, நான் உன் படத்தை தான் பார்க்குறேன்பா " என்று கூறி இருக்கிறார் .
" அம்மா என்னைப் பார்க்க நீங்க நூறு நாட்கள் என்று நூறு ரூபாய் செலவழிச்சீங்க இல்லையா ? நான் அதுக்கு ஆயிரம் ரூபாய் தரேன் வாங்கிக்குங்க , " என்று கூறி இருக்கிறார் வள்ளல் குணம் கொண்ட எம்ஜிஆர்.
" யப்பா , உனக்கு அம்மான்னா உசிராமே ,தாய் , தன் பிள்ளையைப் பார்க்க கூலி வாங்கனுமா என்ன ? வச்சுக்கோ , ஆண்டவன் கொடுக்குறது போதும் " என்று அந்த பணத்தை மறுத்திருக்கிறார் அந்த மூதாட்டி.
சுருக்கம் மிகுந்த அந்தக் கையை மக்கள் திலகம் எம்ஜிஆர் முத்தமிட்டப் போது அந்த அரங்கமே அதிர்ந்திருக்கிறது.
அவர்தான், மக்களின் எவர்க்ரீன் ஹீரோ எம்ஜிஆர்! எப்போதும் மக்கள் மனதில் வாழ்பவர்.!!