/* */

இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் பிறந்த தினமின்று

இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் பிறந்த தினமின்று
X

இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர்

ஒரே கதாநாயகனின் இன்னொரு படத்துடன் ஒரே நாளில் மோதி மூன்று முறை வெற்றிகண்ட ஏ.சி.திருலோகச்சந்தர் பிறந்த தினமின்று

ஏ. சி. திருலோகச்சந்தர் புகழ்பெற்ற பல தமிழ்த் திரைப்படங்களையும், சில இந்தி ,தெலுங்குப் படங்களையும் இயக்கியுள்ளார். 1969 இல் இவர் இயக்கிய தெய்வமகன் திரைப்படம் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதலாவது தென்னிந்தியத் திரைப்படமாகும்.

வேலூர் மாவட்டம் ஆற்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர் திருலோகச்சந்தர். 1962 இல் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த வீரத்திருமகன் திரைப்படத்தை முதன் முதலில் இயக்கினார். திருலோகச்சந்தர் 2016 ஜூன் 15 அன்று தனது 86-ஆவது வயதில் சென்னையில் காலமானார். இவருக்கு மல்லி சீனிவாசன் என்ற மகளும், ராஜ்சந்தர் என்ற மகனும் உள்ளனர். இவரது இறப்பிற்கு சில நாட்களுக்கு முன்னர் இவரது இன்னொரு மகன் பிரேம் திரிலோக் அமெரிக்காவில் காலமானார்.

யார் இந்த திருலோகச்சந்தர்...

பல ஆண்டுகளாக சினிமா உலகில் கோலோச்சி வந்த பத்மநாப ஐயர் என்பவரிடம் ஆரம்பத்தில் உதவி இயக்குநராக சேர்ந்து பணியாற்றினார் ஏ.சி.திருலோகச்சந்தர். அவர் பணியாற்றிய முதல் படம் எம்.ஜி.ஆர். நடித்த "குமாரி". இப்படம் 1952-இல் வெளியானது. ஜாம்பவான் இயக்குநர் கே.ராம்நாத்திடமும் சில காலம் உதவி இயக்குநர் வேலை செய்தார்.

இதன் பின்னர் இயக்குநர் ஜோசப் தளியத், தான் இயக்கும் 'விஜயபுரி வீரன்' படத்தில் உதவி இயக்குநர் அந்தஸ்து வழங்கினார். அத்தோடு திரைக்கதை அமைக்கும் வாய்ப்பையும் அளித்தார். ஆங்கில படங்களைப் பார்த்து அதன் தாக்கத்தில் விதவிதமான காட்சிகளையும் கதைகளையும் மனதில் வடிவமைப்பதில் ஏ.சி.திருலோகச்சந்தர் படு கில்லாடியாகத் திகழ்ந்தார்.

ஏ.சி.திருலோகச்சந்தர் திறமையைப் பற்றி ஏவி.மெய்யப்பச் செட்டியாரிடம் சொன்னவர் நடிகர் எஸ்.ஏ.அசோகன். இப்படித்தான் ஏவிஎம் ஸ்டூடியோ என்ற தாய்வீட்டில் நுழைந்தார் ஏ.சி.திருலோகச்சந்தர். 1962-ஆம் ஆண்டில் நடிகை டிஸ்கோ சாந்தியின் தந்தை சி.எல்.ஆனந்தனைக் கதாநாயகனாகவும்; நடிகை சச்சுவைக் கதாநாயகியாகவும் வைத்து ஏவி.எம். நிறுவனத்துக்காக "வீரத்திருமகன்" என்ற படத்தினை இயக்கினார் ஏ.சி.திருலோகச்சந்தர். இப்படத்தில் இடம்பெற்ற ரோஜா மலரே ராஜகுமாரி மற்றும் வெத்திலை போட்ட பத்தினி பொண்ணு ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ஓங்கி ஒலித்தது. படமும் திரையிட்ட இடங்களிலெல்லாம் ஓஹோவென்று ஓடியது.

ஏவி.எம்.நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன் சரோஜாதேவி நடித்து நட்பின் பெருமையைச் சொன்ன படம் 'பார்த்தால் பசி தீரும்'. குழந்தை நட்சத்திரத்திலேயே கமல் இரட்டை வேடத்தில் அசத்திய படம் இது. இப்படத்திற்குக் கதை எழுதிக்கொடுத்தது ஏ.சி.திருலோகச்சந்தர். இப்படமும் மகத்தான வெற்றிப்படம். 1963-இல் ஏ.சி.திருலோகச்சந்தர்-ஏவி.எம் கூட்டணியில் உருவானது 'நானும் ஒரு பெண்' என்ற படம். மிகச் சிறந்த படம், எஸ்.எஸ்.ராஜேந்திரன், சி.ஆர்.விஜயகுமாரி, எஸ்.வி.ரங்காராவ் போன்ற பலர் நடித்த இப்படம் தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கிக் குவித்தது.

பழனிச்சாமியாக இருந்த சிவகுமாரை முதன் முதலில் 'காக்கும் கரங்கள்' (1964) என்ற படம் மூலம் திரையில் அறிமுகப்படுத்தியதும் ஏ.சி.திருலோகச்சந்தர் தான். ஏவி.எம். நிறுவனம் முதன் முதலில் வண்ணப்படம் தயாரிக்க விரும்பியதும் அந்த வாய்ப்பு அப்போதைய வசூல் சக்ரவர்த்தியான எம்.ஜி.ஆருக்கேப் போனது. அதற்குமுன் வெளியான சக்கரபாணி-நாகிரெட்டியின் விஜயா வாஹினி ஸ்டூடியோஸ் தயாரித்த 'எங்க வீட்டு பிள்ளை' பெற்றுக்கொடுத்த மாபெரும் வசூல் புரட்சி.

எம்.ஜி.ஆரை வித்தியாசமான பாணியில் நடிக்க ஒப்புக்கொள்ள வைத்து, ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்களே இயக்கவேண்டும் என்று மிகவும் விருப்பப்பட்டவர் நடிகர் அசோகன். ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கி 1966-இல் வெளியான 'அன்பே வா', 50 ஆண்டுகளாகியும் இன்றும் ரசிகர்களைக் சுவர்ந்திழுக்கிறது. சாதாரணமாக எம்.ஜி.ஆரின் படங்கள் அம்மா, அக்கா, தங்கை செண்டிமெண்ட் நிறைந்ததாகத் தானிருக்கும். ஆனால் அன்பே வா அதற்கு நேர் எதிர்மறையாக நகைச்சுவை ததும்ப படமாக்கப்பட்டிருக்கும். எம்.ஜி.ஆரும் இது என் படமல்ல உங்கள் படம். ஆதலால் உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு நீங்கள் படமாக்கிக் கொள்ளுங்கள் என்று முழு சுதந்திரம் கொடுத்தார்.

இதேபோல ஏ.சி.திருலோகச்சந்தர் – ஏவி.எம் கூட்டணியில் ஜெமினிகணேசன், கே.ஆர்.விஜயா நடித்த 'ராமு' படமும், சிவாஜிகணேசன், நிர்மலா, விஜயஸ்ரீ நடித்த 'பாபு' படமும் மாபெரும் வெற்றி பெற்று பல மொழிகளில் வெளிவந்தது.. நடிகர் ரவிச்சந்திரனையும் காஞ்சனாவையும் வைத்து அசத்தல் வண்ணத்தில் ஆனால் திகிலோடு மிரட்டியது ஏ.சி.திருலோகச்சந்தரின் இன்னொரு பிளாக் பூஸ்டர் திரைப்படம் 'அதே கண்கள்'. 1967-ஆம் ஆண்டில் வெளிவந்தது இப்படம்.

இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. பூம்பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி, சின்னப்பெண்ணொருத்தி சிரிக்கிறாள், கண்ணுக்குத் தெரியாதா, என்னென்னமோ நான் நினைத்தேன், ஹோ ஹோ எத்தனை அழகு இருபது வயதினிலே என்ற அற்புதமான பாடல்கள் வேதாவின் இசையில் உருவாகி சக்கைப்போடு போட்டது. இப்படத்தில். ஏ.சி.திருலோகச்சந்தரின் இயக்கத்தில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது என்றால் 1967-இல் வெளிவந்த 'இரு மலர்கள்' படத்தை சொல்லவேண்டும். சிவாஜிகணேசன், பத்மினி, ரோஜா ரமணி, நாகேஷ், மனோரமா ஆகிய பலர் நடித்திருக்கும் இப்படத்தில் சிவாஜிகணேசன், பத்மினி இருவரையும் அசால்ட்டாக சாந்தி என்ற பாத்திரத்தில் துவம்சம் செய்திருப்பார் கே.ஆர்.விஜயா.

ஒரு சுவையான விஷயம் யாதெனில் 1967-இல் சிவாஜியை வைத்து ஏசி திருலோகச்சந்தர் இயக்கிய 'இரு மலர்கள்' படம்.. வெளியீட்டுக்கு ஏற்பாடாகிவிட்டது.. அதே நாளில் இயக்குநர் ஜாம்பவான் ஸ்ரீதர், சிவாஜிகணேசன், கே.ஆர்.விஜயா, ரி.எஸ்.பாலையா நடித்த 'ஊட்டி வரை உறவு' படத்தை வெளியிடுகிறார். ஆனால் ஒரு கதாநாயகனின் இரண்டு படங்களுமே நூறு நாட்களை கடந்து ஓடி மிகப் பெரிய வெற்றியை ஈட்டின.

1970-இல் சிவாஜிகணேசன், ஜெயலலிதா, நாகேஷ், சுந்தரராஜனை வைத்து ஏசி திருலோகச்சந்தர் இயக்கிய 'எங்கிருந்தோ வந்தாள்' படம் வெளியீட்டுக்கு ஏற்பாடாகிவிட்டது. அன்றும் சோதனையாக ரி.ஆர். ராமண்ணா சிவாஜிகணேசன், கே.ஆர்.விஜயா, விஜயலலிதாவை வைத்து 'சொர்க்கம்' இயக்கிய படத்தை அதே நாளில் வெளியிட்டார். என்றாலும் இரண்டு படங்களுமே சிறந்த படமாக இருந்ததால் 100 நாட்கள் கடந்து ஓடியது.

1975-ஆம் ஆண்டில் சிவாஜிகணேசனை வைத்து ஏசி திருலோகச்சந்தர், 'டாக்டர் சிவா' என்னும் படத்தை இயக்கி வெளியிட்ட அதே நாளில் ஸ்ரீதர் மீண்டும் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்த 'வைர நெஞ்சம்' படத்தை வெளியிட்டார். இம்முறையும் ஸ்ரீதர் படத்தோடு ஏசி திருலோகச்சந்தர் படமும் 100 நாட்களைக் கடந்து வெற்றிக்கொடி நாட்டின. ஒரு கதாநாயகனை வைத்து படம் இயக்கி அதே கதாநாயகனின் இன்னொரு படத்துடன் ஒரே நாளில் மோதி மூன்று முறை வெற்றிகண்டவர் ஏ.சி.திருலோகச்சந்தர்.

'பாரதவிலாஸ்', 'அவன்தான் மனிதன்', 'பத்ரகாளி', இலங்கையின் நாயகி மாலினி பொன்சேகாவை சிவாஜிகணேசனுடன் ஜோடி சேர்த்து எடுத்த 'பைலட் பிரேம்நாத்', ரஜினிகாந்துடன் 'வணக்கத்துக்குரிய காதலியே', நதியாவுடன் சிவாஜிகணேசன் கலக்கிய 'அன்புள்ள அப்பா' என ஏசி திருலோகச்சந்தரின் இயக்குநர் பயணம் 65 க்கும் மேல் பெரியது என்பதைவிட வெற்றிகரமானது.

கே.பாலாஜியின் மாபெரும் வெற்றிப்படங்களில் என் தம்பி, திருடன், தங்கை போன்ற படங்களும் இவர் இயக்கத்தில் உருவானவை. 1969-இல் வெளிவந்த 'தெய்வமகன்' சிவாஜிகணேசன் தந்தை, மகன்கள் என மூன்று வேடங்களில் நடிப்பில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தி அசத்திய படம். எல்லாவற்றையும் விட ஆஸ்கார் விருதுக்காக முதன் முதலில் இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட படம், ஏசி திருலோகச்சந்தர் இயக்கிய தெய்வமகன்தான். தமிழ் தவிர தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பல படங்களை இயக்கியுள்ளார்.

11.06.1930 அன்று வேலூர் மாவட்டம், ஆற்காடு என்னுமிடத்தில் பிறந்த ஏ.சி.திருலோகச்சந்தர் வயது முதிர்வின் காரணமாக 15.6.2016-அன்று தனது 86-ஆவது வயதில் காலமானார்.

Updated On: 11 Jun 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?