இந்திய சினிமா ஆளுமை விருது; நடிகர் சிரஞ்சீவி தேர்வு
Megastar Chiranjeevi Indian Film Personality award-கோவாவில் நடந்துவரும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில், நடப்பு ஆண்டின் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமை விருதுக்கு, நடிகர் சிரஞ்சீவி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
HIGHLIGHTS
actor Chiranjeevi honoured with Indian Film Personality of the Year 2022, Megastar Chiranjeevi Indian Film Personality - ஆசியாவின் மிக பெரிய திரைப்பட திருவிழா என்ற பெருமையுடன் 53-வது சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் தொடங்கியுள்ளது. அடுத்த 8 நாட்களுக்கு, உலகின் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும். இந்த விழாவில் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.
இந்தி திரைப்பட நடிகர்கள் அஜய் தேவ்கன், வருண் தவான், கார்த்திக் ஆர்யன், மனோஜ் பாஜ்பாய், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி மற்றும் நடிகை சாரா அலிகான் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் பங்கேற்றார். இவ்விழாவில் கலந்து கொள்வதில் பெருமையாக உணர்கிறேன் என, நடிகர் அஜய் தேவ்கன் கூறினார். உலகம் முழுவதிலும் இருந்து பட இயக்குனர்கள் வருகை தந்து, தங்களது திரைப்படங்களை வெளியிடும் ஒரு பெரிய திரைப்பட திருவிழாவை நாம் நடத்துகிறோம் என்பது பெருமைக்கு உரிய விஷயம் என, நடிகர் மனோஜ் பாஜ்பாய் கூறினார்.
இந்த 53-வது சர்வதேச இந்திய திரைப்பட திருவிழாவில், நடப்பு ஆண்டின் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமை விருதுக்கு பிரபல நடிகர் சிரஞ்சீவி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதனை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார். ஏறக்குறைய நான்கு சதாப்தங்களாக நடிகர், நடன கலைஞர் மற்றும் தயாரிப்பாளர் என 150 படங்களில் பணியாற்றி நடிப்பு துறையில், நடிகர் சிரஞ்சீவி புகழ் பெற்று உள்ளார் என தனது டுவிட்டரில் அவர் தெரிவித்து உள்ளார்.
இந்த விருது, முன்னதாக நடிகர் ரஜினிகாந்த், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் உள்ளிட்ட முக்கியத் திரைப் பிரபலங்கள் சிலருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
1978-ல் தனது திரைப் பயணத்தை ஆரம்பித்த சிரஞ்சீவி, தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னட மொழிகளில் கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இப்போதும் முன்னணி நடிகராக வலம் வரும் இவர் தற்போது 'வால்டர் வீரய்யா' மற்றும் 'போலா சங்கர்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
சிரஞ்சீவியின் இயற்பெயர் கொன்னிதெல சிவசங்கரா வரபிரசாத். இவர் பிறந்தது, ஆகஸ்ட் 22, 1955. வயது 67 என்றாலும், இன்னும் நடுத்தர வயது தோற்றம்தான். 2006ம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்படும் இரண்டாம் நிலை விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றார். 7 முறை பிலிம்பேர் விருதைப் பெற்ற ஒரே தெலுங்குத் திரைப்பட நடிகர். இவர் 2008, ஆகஸ்ட் 17ம் தேதி அன்று புதிய கட்சியை துவக்கினார். கட்சியின் பெயர் பிரஜா ராஜ்யம் கட்சி என்று அறிவித்தார். 2009ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பலேகொல், திருப்பதி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு, திருப்பதியில் மட்டும் வெற்றிபெற்றார். அரசியல்வாதியாக பெரிய அளவில் சோபிக்காத நிலையில், 2011 ஆகஸ்ட் 20 அன்று ராஜீவ் காந்தி பிறந்தநாளில், புதுடில்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
எனினும், அரசியலை காட்டிலும், சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.