'நீங்கள் எந்த கட்சி என்பது முக்கியமல்ல; அந்த கட்சியின் முன்னேற்றமே முக்கியம்' நடிகர் கமல்ஹாசன் 'பளிச்'
'நீங்கள் எந்த கட்சி சார்ந்தவர் என்பது முக்கியமல்ல; அந்த கட்சியின் முன்னேற்றத்துக்காக, என்ன செய்தீர்கள் என்பதுதான் முக்கியம்,' என்கிறார் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன்.
HIGHLIGHTS

மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர், நடிகர் கமல்ஹாசன்
பல ஆண்டுகளாக, அரசியலுக்கு வந்து துாள் கிளப்ப போகிறார் என மக்கள் ஆர்வமாக எதிர்பார்த்தது நடிகர் ரஜினியை தான். ஆனால் திடீரென அரசியலுக்குள் வந்தவர் கமல்ஹாசன். மதுரையில், மக்கள் நீதிமய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சி துவங்கி தலைவராகவும் ஆனார். அரசியல், சினிமா இரண்டிலும் தீவிர கவனம் செலுத்திய கமல், இடையிடையே 'பிக்பாஸ்' நிகழ்ச்சியையும் நடத்தினார்.
அரசியலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த கமலை, லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படம், உற்சாகத்தை கொடுத்தது. இப்படம், 400 கோடி ரூபாய் வசூலித்து, கமல் எப்போதுமே நடிப்பில் சகலகலா வல்லவன் தான் என்பதை நிரூபித்தது.
அடுத்தடுத்து 'கமிட்' ஆகும் புதிய படங்களில் நடிக்க சம்மதிக்கும் கமல், தனது சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் மூலமாக, இளம் நடிகர்களை வைத்து, படங்கள் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
சமீபத்தில், கமல்ஹாசன் கலந்துகொண்ட ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில், மனம் திறந்து பல விஷயங்களை பேசி இருக்கிறார். அப்போது அவர் கூறுகையில்,
‛மக்கள் நீதி மய்யம் துவங்கி, நான் அரசியலுக்கு வந்தபோது, 'சினிமாவில் மார்க்கெட் இல்லை. அதனால்தான் கமல் அரசியலுக்கு வந்து விட்டார்,' என பலர் கூறினர். அப்படி கூறிய அவர்கள்தான், வேறு வழி இல்லாமல், அப்படி வந்திருப்பார்கள்.
தலைவனாக சாக வேண்டும் என்பது முக்கியமல்ல; தமிழனாக சாக வேண்டும் என்பதுதான் முக்கியம். நான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதுதான் அரசியலுக்கு வந்தேன். நான் நவ அரசியல் கலாச்சாரவாதி, அரசியல்வாதி இல்லை. நீங்கள் எல்லாம் அரசியலுக்கு வரவில்லை என்றால், அரசியல் உங்களை பாதிக்கும். நீங்கள் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல. அந்த கட்சியின் முன்னேற்றத்திற்காக என்ன செய்தீர்கள் என்பதுதான் முக்கியம். தொடர்ந்து நீங்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும். ஜனநாயகத்தின் பாதுகாவலர் நீங்கள் தான். மேலும் தலைவன் இல்லை என்றால் நீங்கள் தலைவனாகி விடுங்கள். அதனால்தான் நான் தலைவன் ஆனேன். தகுதி, திறமையை விட உணர்வு தான் எனக்கு முக்கியமாக தெரிகிறது, என்று கூறி அசத்தியுள்ளார் கமல்ஹாசன்.