சவாலான கேரக்டர் வந்தியத்தேவன்; நடிகர் கார்த்தி மகிழ்ச்சி
வந்தியத்தேவன், சர்தார் போன்ற சவாலான கேரக்டர்களில் நடித்தது மகிழ்ச்சியளிப்பதாக, நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
இயக்குநர் அமீர் மூலம், 'பருத்திவீரன்' படத்தில் அறிமுகமானார் கார்த்தி. முதல் படத்திலேயே இவரது அட்டகாசமான நடிப்பால், ரசிகர்களின் மனங்களை வென்றார். ஊருக்குள் சித்தப்பா சரவணனுடன் சண்டியராக ரவுடித்தனம் செய்யும் வாலிபராக, மிரட்டலான நடிப்பை தந்திருப்பார் கார்த்தி. முதல் படம் போல் இல்லாமல், பல ஆண்டுகள் நடிப்புத்துறையில் இருந்தவரை போல, மிகச்சிறந்த நடிப்பாற்றலை வழங்கி இருந்தார். முதல் படத்திலேயே கார்த்தி, முத்திரை பதித்தார்.
அப்பா சிவக்குமார், அண்ணன் சூர்யாவை தொடர்ந்து, கார்த்தியும் நடிகராக வளரத் துவங்கினார். அடுத்தடுத்த படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டது. குறிப்பாக பையா, நான் மகான் அல்ல, மெட்ராஸ், தீரன் அதிகாரம் 1, சிறுத்தை, தோழா, கைதி, கடைக்குட்டி சிங்கம் என பல படங்களில், சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, பாராட்டை பெற்றார்.
அதிரடி சண்டை காட்சிகளிலும், காதல், நகைச்சுவை, சென்டிமென்ட் என, பலவிதமான நடிப்பையும் சிறப்பாக கார்த்தி வெளிப்படுத்துவது அவரது படங்களை, அதிகமாக ரசிக்க வைக்கிறது. அதிலும், கடைக்குட்டி சிங்கம் படத்தில், 'தாய்மாமன்' கேரக்டரில் யதார்த்தமாக நடித்திருப்பார் கார்த்தி.
கடந்தாண்டில் கார்த்திக்கு சர்தார் மற்றும் பொன்னியின் செல்வன் படங்கள், மிகச்சிறந்த வெற்றிப்படங்களாக அமைந்தது. அதுவும், மணிரத்னம் இயக்கத்தில், வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி நடிப்பு, ரசிகர்களால் பாராட்டப்பட்டது. மேலும், சர்தார் படத்திலும் இரட்டை வேடங்களில் கார்த்தியின் ஆக்ஷன் நடிப்பு, அசத்தலாக இருந்தது. 'விருமன்' படம் மிகப்பெரிய வெற்றி பெறாத போதும், நல்ல வசூல் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்தாண்டு சவாலான வேடங்களில் நடித்தது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று நடிகர் கார்த்தி அறிக்கை ஒன்றின் வாயிலாக தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '2022- ம் ஆண்டில் 'விருமன்', 'பொன்னியின் செல்வன்'- பாகம் 1 மற்றும் 'சர்தார்' ஆகிய மூன்று படங்களும் வெற்றிபெற்று, தொழில் ரீதியாக சிறப்பான ஆண்டாக அமைந்தது. இந்த வணிக வெற்றிக்கான பாராட்டுகளை எனது படங்களில் எனது தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதே நேரத்தில், என்னுள் இருக்கும் கலைஞன் வெளிப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக, வந்தியதேவன் மற்றும் சர்தார் போன்ற தனித்துவமான மற்றும் சவாலான கதாபாத்திரங்களில் நடித்ததில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
உழவன் அறக்கட்டளையில் எனது சகோதர சகோதரிகள் ஆற்றிய பாராட்டுக்குரிய பணிக்காக நான் பெருமைப்படுகிறேன். விவசாயிகளை அங்கீகரிப்பதற்காக நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பது, அவர்களுக்கு புதிய வாய்ப்புகளைக் கொண்டு வருவதற்கு அதிக தெரிவுநிலையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இன்னும் பல ஆண்டுகளுக்கு, எனது தீவிர ரசிகர்களையும், பார்வையாளர்களையும் தரமான படங்களுடன் தொடர்ந்து மகிழ்விப்பேன் என்று நான் உறுதியளிக்கிறேன். அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள், என்று கூறியுள்ளார்.