30 வருடங்களாக இருந்த ஆதங்கம் - மாமன்னன் படவிழாவில் போட்டுடைத்த ARR!
தனக்குள் இருந்த ஆதங்கம்தான் மாமன்னன் கதை என்று இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். இந்த படம் கடந்த ஜூன் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இந்த படத்துக்கு வாழ்த்து கூறியிருந்த நிலையில் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இன்றும் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் மாமன்னன் திரைப்படத்தின் 50ஆவது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ், சென்னையில் அமைந்துள்ள பிரபல தனியார் ஹோட்டலில் 50 நாள் வெற்றி விழாவை நடத்தியது. இந்த விழாவில் படத்தில் பணியாற்றியவர்கள், படத்தை திரையிட்டவர்கள், விநியோகஸ்தர்கள் உள்பட 250 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
இதில் கலந்துகொண்டு பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், படத்தைப் பற்றியும் படத்தில் பணிபுரிந்தவர்கள் பற்றியும் பேசினார். மேலும் அவர் எனக்குள் 20-30 ஆண்டுகளாக இருந்த ஆதங்கம் தான் இந்தக் கதை என்றும், ஏன் இப்படி நடக்கிறது? என ஆதங்கப்பட்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆதங்கத்தை என்னும் வைத்துக்கொண்டு இது போல என்னால் இசையில் எதுவும் பண்ண முடியவில்லை. அதனால் யார் செய்கிறார்களோ அவர்களுடன் இணைந்து விட்டேன் என்று மாமன்னன் படம் எடுத்த மாரிசெல்வராஜுடன் இணைந்தது குறித்து பேசியுள்ளார் ஏ ஆர் ரஹ்மான்.
மாமன்னன் படம் இந்த அளவுக்கு சிறப்பாக வரும் என்று தான் நினைக்கவில்லை எனவும், தனக்குப் பிடித்த இயக்குநர்களின் சாயலில் இந்த படம் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ஒரு காட்சி வரும் அதில் உதயநிதியுடன் பைக்கில் வடிவேலு சென்று கொண்டிருப்பார். இந்த காட்சியைப் பார்த்ததும்தான் படத்தை இன்னும் சிறப்பாக கொடுக்க முடிவு செய்தேன் என்று கூறினார். அப்போது தான் ‘ராசா கண்ணு’ பாடலுக்கான ஐடியா தனக்குள் தோன்றியது என்று அவர் தெரிவித்தார்.
இந்த விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் இந்த படம் உறுதியாக வெற்றி பெறும் என்று தான் நம்பியதாகவும் அதேபோல் வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறினார். வடிவேலு மட்டும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முன்வராவிட்டால் இந்த படத்தையே கைவிட்டுவிட்டு வேறு படத்தை செய்திருப்போம் என்று தெரிவித்தார் உதயநிதி. இனி நடிப்பதாக இல்லை என்றும் அவர் உறுதியாக கூறியுள்ளார்.