அனைவருக்கும் பிடிக்கும் 'அடடே சுந்தரா': நடிகர் நானி நம்பிக்கை..!
ரசிகர்கள் அனைவருக்கும், தான் நடித்துள்ள அடடே சுந்தரா திரைப்படம் பிடிக்கும் என நடிகர் நானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
அவ்வப்போது, பிறமொழி நாயகர்கள் தமிழுக்கு வருவார்கள். அப்படிவரும் அவர்கள் பெரும்பாலும் ஹிட் படத்தை அளிப்பதுதான் குறிப்பிடத்தக்கது. அப்படி கடந்த காலங்களில் கோலிவுட் ரசிக மனங்களில் அழுத்தமான சிம்மாசனம் அமைத்து அமர்ந்த 'பாகுபலி', மிக அண்மையில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' படங்களை அத்தனை எளிதில் விட்டு ரசிகர்கள் விலகிட முடியாது.
அந்தவகையில், தெலுங்குப் பட உலகின் முன்னணி நாயகர்களில் ஒருவரான நடிகர் நானி நாயகனாகவும் மலையாள நடிகை நஸ்ரியா நாயகியாகவும் நடித்திருக்கும் 'அடடே சுந்தரா' திரைப்படம் வரும் ஜூன் 10-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. தமிழிலும் தெலுங்கிலும் வெளியாகவிருக்கும் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.
படத்தின் முன்னோட்ட வெளியீட்டின்போது பேசிய நடிகர் நானி, ''தொடர்ந்து அடிதடி என ஆக்ஷன் படங்களில் நடித்துவிட்டு காமெடியும் காதலுமான 'அடடே சுந்தரா' படத்தில் நடித்ததை மிகவும் பொருத்தமானதாகவே நினைக்கிறேன். இந்தப் படம் நிச்சயம் எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
நல்ல திரைக்கதையை கொண்ட இந்தப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் என அனைத்து மொழி ரசிகர்களையும் ஈர்க்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்காது. படத்தில் பங்குபெற்ற படக்குழுவினர் அனைவருமே கடின உழைப்பை அர்ப்பணிப்போடு கொடுத்திருக்கிறார்கள். நிச்சயம் இப்படம் நிஜமான தியேட்டர் ஃபீலிங்கைக் கொடுக்கும்'' என்று நம்பிக்கையும் உறுதியும் கலந்த வார்த்தைகளில் அழுத்தமாகப் பேசினார்.