வசன கர்த்தா ஆரூர்தாஸ் மறைந்தார்... ஆழ்ந்த சோகத்தில் தமிழ் திரையுலகம்
தமிழ்த் திரையுலகின் பழம் பெரும் கதை வசனகர்த்தாவான ஆரூர்தாஸ் மரணமடைந்தார். அவரது இழப்பால் தமிழ்த் திரையுலகம் சோகமடைந்தது.
HIGHLIGHTS
தமிழ்த் திரையுலகின் மூத்த வசனகர்த்தாவான ஆரூர்தாஸ் நேற்று(20/11/2022) வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார். 91 வயது நிரம்பிய ஆரூர்தாஸ் ஏராளமான தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். பழம்பெரும் வசனகர்த்தாவான அவர், நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என தமிழ் சினிமாவின் மறைந்த பல திரையுல்க ஜாம்பவான்களின் திரைப் படங்களுக்கு வசனம் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் திரையுலகில் தனக்கென்று தனிப்பாணி வகுத்துக் கொண்டு வசன உலகில் பயணித்து வந்த ஆரூர்தாஸ், 1931-ம் ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி திருவாரூரில் பிறந்த பிரபல எழுத்தாளர் ஆவார். வயதுமூப்பின் காரணமாக அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று(20/11/2022) ஞாயிற்றுக்கிழமை தனது இல்லத்தில் மாலை 6.40 மணியளவில் காலமானார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட எண்ணற்ற திரை நட்சத்திரங்களின் பல வெற்றிப்படங்களுக்கு வசனம் எழுதிய பெருமைக்குரியவர் ஆரூர்தாஸ்.
இவர், 1954-ம் ஆண்டு வெளியான, 'நாட்டியதாரா' படத்தின் மூலம் திரையுலகில் வசனகர்த்தாவாக அறிமுகமானவர். எம்.ஜி.ஆர். நாயகனாக நடித்த, 'தாய் சொல்லைத் தட்டாதே', 'அன்பே வா', 'தாயைக் காத்த தனயன்', 'குடும்பத் தலைவன்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு இவர் வசனம் எழுதி உள்ளார். அதேபோல் நடிகர் சிவாஜி கணேசன் நாயகனாக நடித்த 'பாசமலர்', 'புதிய பறவை', 'தெய்வ மகன்', 'அன்னை இல்லம்' உள்ளிட்ட எண்ணற்ற திரைப் படங்களுக்கு இவர் வசனம் எழுதி உள்ளார்.
சிவாஜி கணேசனின் 'குடும்பம் ஒரு கோயில்' திரைப் படத்துக்குப் பிறகு பெரிய அளவில் தமிழ்த் திரைப் படங்களுக்கு வசனம் எழுதாமல் தெலுங்கு டப்பிங் படங்களுக்கு வசனம் எழுதி உள்ளார். கடைசியாக 2014-ம் ஆண்டு நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிப்பில் வெளியான 'தெனாலி ராமன்' திரைப் படத்திற்கு ஆருர்தாஸ் வசனம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் திரைப் படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி வந்த ஆரூர்தாஸ், நடிகர் ஜெமினி கணேசன் நடித்த, 'பெண் என்றால் பெண்' என்கிற படத்தை இயக்கி இயக்குநராகவும் அறிமுகமானார். ஆனால், அதன் பின்னர் ஆரூர்தாஸ் எந்தவொரு படத்தையும் இயக்கவில்லை. பேபி என்பவரை மணந்த ஆரூர்தாஸுக்கு 3 மகள்களும் ஓர் மகனும் உள்ளனர். இவர்களுடன் சென்னை தி.நகரில் வசித்து வந்த ஆரூர்தாஸ் காலமான நிலையில், அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மாதா கேஸல், 20/35, நாதமுனி தெரு, தி. நகரில் உள்ள இல்லத்தில் இன்று(நவம்பர் 21, திங்கட்கிழமை) மதியம் 12 மணி வரை அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், அவரது குடும்பத்தினர் முன்னிலையில், இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.